கோலாலம்பூர்: கோவிட் -19 நடமாட்ட கட்டுப்பாடுகள் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நாட்டின் மிருகக்காட்சி சாலை (Zoo Negara) நாளை மீண்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகின்றது.
கிள்ளான் பள்ளத்தாக்கு, செப்டம்பர் 10 ஆம் தேதி தேசிய மீட்புத் திட்டத்தின் (NRP) இரண்டாம் கட்டத்திற்கு நகரும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து, மிருகக்காட்சி சாலை மீண்டும் திறப்பதற்குத் தயாராகி வருவதாக மிருகக்காட்சி சாலை நிர்வாகம் கூறியது.
மிருகக்காட்சி சாலை துணைத் தலைவர் ரோஸ்லி @ ரஹ்மத் அஹமட் லானா இது பற்றிக்கூறுகையில், பல மாதங்களாக தொடர்ந்த முடக்க நிலைக்குப் பிறகு பார்வையாளர்களை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
மேலும், மீண்டும் திறக்கப்படும் மிருகக்காட்சி சாலைக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு, பல சிறப்பு சலுகைகளையும் அது கொண்டுள்ளது என்றார்.
“வெள்ளிக்கிழமை பார்வையாளர்கள் டிக்கெட் விலையில் 20 சதவிகித தள்ளுபடியை வழங்குகின்றது. அதாவது டிக்கெட் விலை 18 வெள்ளி யிலிருந்து (12 வயதுக்குட்பட்ட மலேசிய குழந்தைகள்), 23 வெள்ளி(மலேசிய மூத்த குடிமக்கள்), 45 வெள்ளி (மலேசிய வயது வந்தவர்கள்) மேலும் வெளிநாட்டவர்களுக்கு 88 வெள்ளி வரை விலைக்கழிவை கொண்டுள்ளது” என்று அவர் கூறினார்.
வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் தவிர, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை முதல் 500 பார்வையாளர்களுக்கு மிருகக்காட்சிசாலையில் வரம்பற்ற அணுகல் (unlimited access) வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மிருகக்காட்சிசாலையில் இந்த ஆண்டு மே மாதம் பிறந்த புதிய அழகிய பாண்டா குட்டி பார்வையாளர்களை கவரும் என்று நம்பிக்கையுள்ளது என்றார். மேலும், மீண்டும் திறக்கும் மிருகக்காட்சி சாலை பார்வையாளர்களுக்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை தயார் செய்துள்ளது என்றும் கோவிட் -19 நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைப்பதற்கான நிலையான இயக்க நடைமுறைகளுக்கு ஏற்ப அவை பின்பற்றப்படும் என்றும் ரோஸ்லி தெரிவித்தார்.
பார்வையாளர்கள், கூட்டத்தை தவிர்க்கும் விதமாக குழுக்கள் மூலம் அனுமதிக்கப்படுவார்கள் என்றார். முகக்கவசம் கட்டாயம் என்றும் அவர் கூறினார்.
“மிருகக்காட்சிசாலையின் பல பகுதிகளில் சுலபமான அணுகலுக்காக கை சுத்திகரிப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன, அதே நேரத்தில் நுழைவு, வெளியேறுதல் மற்றும் நடைபாதைகள் மற்றும் எப்போதும் தனிநபர் இடைவெளியை பராமரிக்க நினைவூட்டல்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.