சொந்த மகனால் தாய், தந்தை இருவரும் வெட்டிக் கொலை

நேற்றிரவு லிப்பிஸ், பென்டாவில் நடந்த ஒரு சம்பவத்தில் தாய் மற்றும் தந்தையை அவர்களது சொந்த மகனே கத்தியால் வெட்டிக் கொலை செய்ததாக நம்பப்படுகின்றது. தங்கள் சொந்தக் குழந்தைகளின் கைகளால் இறந்து போவது மிகவும் வேதனையானது.

கம்போங் கெமஹாங்கில் இரவு 11.55 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், முஹமட் மாசாய் (68) மற்றும் ஓய்வுபெற்ற விடுதி மேற்பார்வையாளரான அவரது மனைவி ஜெய்லான் ஜைனுடின் (64) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சந்தேகத்திற்குரியவரான கொலையுண்டவர்களின் மகன், ஒரு வேலையில்லாதவர். தனது பெற்றோர்களுடன் மத அறிவு மற்றும் தெய்வீகம் பற்றி பேசிய பின்னரே இந்த சோகம் நடந்ததாக கூறப்படுகிறது.

லிபிஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸ்லி முஹமட் நூரின் கூற்றுப்படி, கொலை நடந்தபோது பாதிக்கப்பட்டவரின் 34 வயது மகன் சம்பவ இடத்தில் இருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது என்றார்.

“சந்தேகநபர் கொலையுண்ட தம்பதியினரின் மகன் என்றும் ஜாலான் பெசார் கெமஹாங் பென்டாவில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள அவர்களது வீட்டில் , இரவு 11.55 மணியளவில் சந்தேக நபர் மற்றும் அவரது பெற்றோர் பேசிக்கொண்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் சந்தேக நபரின் தாயார் அறைக்குள் நுழைந்தபோது, ​​சந்தேக நபர் தனது தந்தையுடன் மதம் மற்றும் தெய்வீகத்தன்மை குறித்து தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார்.

சந்தேக நபரின் ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில், மதம் தொடர்பாக பேசிய போது ஏற்பட்ட விவாதம் சர்ச்சையாக மாறியதால் தனது தந்தையின் கண்கள் கருப்பு நிறமாக மாறியதாகவும், அவர் தன்னை தாக்க விரும்புவதாகவும் தெரிந்தது என்றும் தொடர்ந்து தந்தை தன்னை அடித்ததாகவும் அவரது தாக்குதலில் இருந்து தப்பிக்கவே தான் பாராங் கத்தியால் வெட்டியதாகவும் கூறினார்.

சம்பவம் நடந்த வேளை சந்தேக நபரின் தாயார் தனது கணவருக்கு உதவ முயன்றார் ஆனால் சந்தேக நபரால் தாயின் கழுத்து மற்றும் தலையை பாராங் கத்தியால் வெட்டினார். தன்னை காப்பாற்றிக் கொள்ளும் எண்ணத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த அந்த வயதான தாயார் வீட்டின் வேலி அருகே சரிந்து விழுந்துள்ளார் என்று அஸ்லி கூறினார்.

மேலும் சந்தேக நபரை அப்பகுதி குடியிருப்பாளர்களால் கைது செய்யப்பட்டபோது, ​​அவர் நிர்வாணமாகவும் மற்றும் அவரது உடல் முழுதும் இரத்தம் படிந்தும் காணப்பட்டது.

அத்தோடு அந்த குடியிருப்பாளர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை ஆய்வு செய்த போது, பாதிக்கப்பட்டவர் (முஹமட்) இரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து இறந்து கிடப்பதை கண்டார். பாதிக்கப்பட்டவரின் மனைவி, வீட்டின் வெளியிலுள்ள புல்வெளியில் இறந்து கிடந்ததாகவும் அவர் தெரிவித்ததாக அஸ்லி கூறினார்.

இவ்வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 302 -ன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here