கொரோனா வைரஸ் எங்கிருந்து, எப்படி பரவியது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான காரியமாக தோன்றுகிறது என்று அமெரிக்க உளவுத்துறையினர் கூறியுள்ளனர்.
சீனாவிலிருந்து கடந்த 2019ம் ஆண்டு பரவிய இந்த கோவிட் -19 ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் முடியவில்லை. உலகம் முழுவதும் பரவிய இந்த கொடூர வைரலாஸ் பெருமளவு மக்கள் உயிரிழந்தனர். பல அலைகளைக் கொண்ட கொரோனாவைரஸ் தொடர்ந்து மக்களை வாட்டி வதைத்துக் கொண்டுதான் உள்ளது. உலக அளவில் இதுவரை கிட்டத்தட்ட 5 மில்லியனுக்கும் மேற்படடவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸை பரப்பியது சீனாதான் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தது தொடர்பாக அமெரிக்க உளவு அமைப்புகளும் விசாரணையில் குதித்தன. ஆனால் தற்போது அதைக் கண்டுபிடிப்பது சிரமம் என்று அந்த உளவு அமைப்புகள் கை விரித்துள்ளன.
கொரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து கசிந்ததா? அல்லது விலங்குகளிடமிருந்து மனிதனுக்குப் பரவியதா?என்பதை கண்டுபிடிக்கும் ஆய்வில் புதிதாக ஒரு அறிக்கையை அவர்கள் அமெரிக்க அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். அதில்தான் அந்த காரணத்தை கடைசி வரை கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறை இயக்குநர் கூறுகையில், ஆய்வகத்திலிருந்து கசிந்தது மற்றும் இயற்கையாக இது உருவானது என்று கூறப்படும் கருத்துக்கள் இரண்டுமே ஊகங்கள்தான்.
அதேசதமயம், இதில் எது உண்மை என்பதை அறுதியிட்டு கூற முடியாத நிலை இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
அதேசமயம், இதை ஒரு உயிரி ஆயுதமாக கருத முடியாது என்றும் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அது தெரிவித்தது. மேலும் ஹூஹான் வைரஸ் கழகத்துடன் இதற்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும் தெரியவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் கொரோனாவை வைத்து டிரம்ப் நிறையவே அரசியல் செய்தார். சீனாதான் இதை பரப்பியது என்று அவர் குற்றம் சாட்டினார். சீனா வைரஸ் என்றும் இதற்குப் பெயரிட்டார். கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலும் கோட்டை விட்டார். இவரது அலட்சியப் போக்கால் அமெரிக்காவில் கொரோனாவால் பெரும் பாதிப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் அமெரிக்க உளவு அமைப்புகள் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதேசமயம், இது இயற்கையாகவே உருவான வைரஸாக இருக்கலாம் என்று சில அமெரிக்க உளவு அமைப்புகள் உறுதிபட நம்புகின்றன. ஆனால் அதில் தெளிவான முடிவுக்கு அவர்களால் வர முடியாத நிலையும் உள்ளது.
கடைசி வரை இந்த விவகாரத்தில் எது உண்மை என்று தெரியாமல் போகக் கூடும் என்றும் உளவு அமைப்புகள் கருத்தை வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கை குறித்து சீனா இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.