கொழும்பு, அக்டோபர் 31 :
கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு இன்று தளர்த்தப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணியுடன் இந்த கட்டுப்பாடு முடிவுக்கு வந்தது. இதன்படி, மாகாணங்களுக்கு இடையில் தடையின்றி மக்களுக்கு பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளை உரிய வகையில் பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகளும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பேருந்துகளிலுள்ள ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாகவே, பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.