தடுப்பூசி பயணப் பாதைத் திட்டத்திற்கு (VTL) இரண்டாவது நாடாக இந்தோனேசியா முன்மொழிவு

குவந்தான், நவம்பர் 28 :

சிங்கப்பூருக்குப் பிறகு மலேசியாவுடனான தடுப்பூசி பயணப் பாதையை (VTL) செயல்படுத்துவதற்கான இரண்டாவது நாடாக இந்தோனேசியா முன்மொழியப்பட்டுள்ளது, இந்த சிங்கப்பூர் -மலேசியா VTL திட்டம் திங்கட்கிழமை (நவ.29) அமலுக்கு வருகிறது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

VTL, மலேசியா- இந்தோனேசியாவிற்கு செயல்படுத்தப்பட்டால், முதலில் கோலாலம்பூர்-ஜகார்த்தா மற்றும் கோலாலம்பூர்-பாலி ஆகிய இரண்டு இடங்களை முதலில் உள்ளடக்கும். ஏனைய வழிகள் பின்னர் படிப்படியாக உள்வாங்கப்படும் என்று அவர் கூறினார்.

“அதை எப்போது செய்ய முடியும் என்பது குறித்து தற்போது எங்களிடம் காலக்கெடு இல்லை, ஆனால் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தனது முந்தைய இந்தோனேசியா பயணத்தில் விவாதித்தபடி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது தொடங்கும் என்று நம்புகிறோம்.

“இதற்கு வேறு மாற்று வழிகளும் பின்பற்றப்படலாம். இருப்பினும், நாட்டின் எல்லைகளைத் திறப்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம், குறிப்பாக இப்போது ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு புதிய கோவிட்-19 மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது, இது மிகவும் ஆபத்தானது, ”என்று அவர் கூறினார்.

பகாங் பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் (Bersatu) தலைவரான சைபுடின், நேற்று நடைபெற்ற கட்சியின் இந்தரா மஹ்கோட்டா பிரிவு (Indera Mahkota division) வருடாந்திர மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

-பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here