கோலா பெராங், டிசம்பர் 2 :
இங்குள்ள செக்கோலா கெபாங்சான் (SK ) செட்டிங் அருகே ஜாலான் கம்போங் பெலண்டான்-செட்டிங்கில் நேற்று, மோட்டார் சைக்கிள் பார ஊர்தியுடன் (Lorry) மோதிய விபத்தில் இரு சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் நடந்த இந்த சாலை விபத்தில், பாதிக்கப்பட்ட முஹமட் ஹைகல் அப்துல்லா, 18, மற்றும் அவரது சகோதரர், முஹமட் இஸ்மான் ஹமிடி, 16, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உலு திரெங்கானு மாவட்ட காவல்துறை தலைமை துணை கண்காணிப்பாளர் முஹமட் அட்லி மட் டாட் கூறுகையில், இந்த சம்பவத்திற்கு முன்பு, 32 வயதான பாரவூர்தி ஓட்டுநர், மதிய உணவுக்காக சாலையின் அருகில் செம்பனம் பழங்களை ஏற்றிச் சென்ற டைஹாட்சு டெல்டா வகை பாரவூர்தியை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
“உணவை முடித்துவிட்டு, பாரவூர்தி ஓட்டுநர் வாகனத்தை பின் நோக்கிச் செலுத்தினார், ஆனால் செட்டிங் திசையில் இருந்து கம்போங் பெலாண்டான் நோக்கி, பலியானவர்கள் ஓட்டிவந்த மோட்டார் வண்டி பாரவூர்தியின் பின்புறத்தின் இடது மூலையில் மோதியது.
“சம்பவத்தை அறிந்த பாரவூர்தி ஓட்டுநர் பின்னர் வாகனத்தை விட்டு வெளியேறினார், பாதிக்கப்பட்டவர்கள் உயிரற்ற நிலையில் சாலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்,” என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
விபத்தில் பலியான இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக உலு திரெங்கானு மருத்துவமனையின் (HHT) தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டதாக முஹமட் அட்லி கூறினார்.
மேலும், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக பாதிக்கப்பட்ட இருவரும் உயிரிழந்தார் என்று பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன என்று அவர் கூறினார்.
“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் (APJ) 1987 பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.