பெந்தோங் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் ஒரு சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது

பெந்தோங், டிசம்பர் 22 :

கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி, பகாங் பெந்தோங்கில் ஒரு கேளிக்கை மையத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, உயிரிழந்தவராக கருதப்படும் சிறுவனின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது.

காலை 10.30 மணியளவில் குழந்தையின் சிதைவடைந்த சடலம் மீட்கப்பட்டதாக பெந்தோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் முகமட் ஜம்ரி அப்துல் கானி தெரிவித்தார்.

சம்பவ இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கோலாலம்பூருக்குச் செல்லும் காராக் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியின் ஓரத்தில் மரக் குவியலில் சடலம் மிதந்து, கிடக்க காணப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுவனின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் அந்த உடல் இம்மானுவேல் சாங்கின் என்ற 6 வயது சிறுவனுடையது என்று தமது துறை நம்புகிறது.

“அடையாளம் கண்டறியும் செயல்முறைக்கு அவரது பெற்றோரை அழைப்போம்” என்று முகமட் ஜம்ரி கூறினார்.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த 26 உறுப்பினர்களை உள்ளடக்கிய தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை காலை 9.40 மணிக்கு தொடங்கியது.

சனிக்கிழமையன்று, ஒன்பது குழந்தைகள் உட்பட 30 க்கும் மேற்பட்டோர், பகாங்கின் பெந்தோங்கில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் ஏற்படட மண்சரிவில் சிக்கி இருந்தனர். அவர்களில் இன்னும் ஒருவரை இன்னும் தேடும் பணி தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here