கோல திரெங்கானு:
கடந்த செவ்வாய்கிழமை முதல் நான்காவது தடவையாக திரெங்கானுவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு அங்கு 14 தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
காலை 8 மணி நிலவரப்படி, தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள 400 குடும்பங்களைச் சேர்ந்த 1,378 பேரும் டுங்கூன் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று, திரெங்கானு மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBN) செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நீர்ப்பாசன மற்றும் வடிகாலமைப்புத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ Public InfoFlood இணையத்தளத்தின் அடிப்படையில், அம்மாநிலத்திலுள்ள ஒரு ஆறு அபாய அளவைக் கடப்பதாகவும், இரண்டு ஆறுகளின் நீர் மட்டம் எச்சரிக்கை நிலையிலும் மற்றும் நான்கு ஆறுகள் எச்சரிக்கை நிலைக்கு அண்மித்தும் காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.









