பட்டர்வொர்த், டிசம்பர் 30 :
கூரியர் சேவையைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தும் முயற்சியை பினாங்கு சுங்கத் துறையினர் முறியடித்துள்ளதுடன் ராஜா உடா வணிக மையத்தில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் டிசம்பர் 22 அன்று நடத்திய சோதனையில், குழந்தைகளின் சைக்கிள் டயர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த RM1.8 மில்லியன் மதிப்புள்ள 18 கிலோ மெத்தாம்பேட்டமைனையும் கைப்பற்றினர்.
பினாங்கு சுங்கத்துறை இயக்குநர் அப்துல் ஹலிம் ரம்லி கூறுகையில், உளவுத்துறையின் கண்காணிப்பின் அடிப்படையில், திணைக்களத்தின் போதைப்பொருள் பிரிவின் குழு மாலை 6 மணியளவில் கூரியர் நிறுவனத்தில் சோதனை நடத்தியது. அங்கு போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தைகளின் சைக்கிள் பிரேம்கள் மற்றும் டயர்கள் அடங்கிய 10 பெட்டிகளை கைப்பற்றியது.
“சோதனையில், 10 பெட்டிகளில் இருந்த சைக்கிள் டயர்களில் மொத்தம் 104 மெத்தாம்பெட்டமைன் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் குழுவினர் கண்டுபிடித்தனர். 18 கிலோ எடையுள்ள இந்த போதைப்பொருட்களின் மதிப்பு 1.8 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அனுப்பியவர் பினாங்கில் சைக்கிள் விற்பவர் மற்றும் பெறுநரின் முகவரி ஓசியானிய நாட்டில் உள்ளவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
“போதைப்பொருள்கள் நாட்டிற்கு வெளியே கடத்தப்பட இருந்தது என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அதிகாரிகளை முட்டாளாக்கும் ஒரு தந்திரமாக கூரியர் சேவையைப் பயன்படுத்தி இருக்கின்றனர் ,” என்று அவர் கூறினார்.
இது தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அப்துல் ஹலீம் கூறினார்.
“அத்தகைய கடத்தல்காரர்கள் அல்லது அவர்களின் செயல்பாடு குறித்த தகவல்களைக் கொண்ட பொதுமக்கள், அந்தத் தகவலை அதிகார தரப்பிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இதனால் அதைக் கட்டுப்படுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு அபாயகரமான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39 B இன் கீழ்விசாரிக்கப்படுகிறது.