கோலாலம்பூர், ஜனவரி 3 :
இன்று நண்பகல் வரையுள்ள நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்கள் மொத்தம் 28,287 பேர் அரசாங்கத்தின் வெள்ள நிவாரண நிதி உதவியைப் பெற்றுள்ளனர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் டுவீட்டர் தளத்தில் ஒரு ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
“இன்னும் பதிவு செய்யவோ அல்லது உதவி பெறாதவர்கள், அந்தந்த மாவட்ட அதிகாரிகளை விரைவில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்றும் அவர் கூறினார்.
மலேசிய குடும்பம் வெள்ள உதவியின் பட்டியலை அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது, இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும் BWI நிதியாக RM1,000 வழங்கும், இது முன்பு RM500 மட்டுமே இருந்தது.
சிலாங்கூர், பகாங் மற்றும் நெகிரி செம்பிலான் உட்பட தீபகற்பத்தில் உள்ள பல மாநிலங்களைத் தாக்கிய எதிர்பாராத வெள்ளத்தில் சிக்கிய 10 நாட்களுக்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று BWI நிதி விநியோகம் தொடங்கியது.
பிரதமர் வெளியிட்ட தனது புத்தாண்டு செய்தியில், BWI நிதி 45,000 குடும்பத் தலைவர்களுக்கு பயனளிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்கள் அனைவரையும் அடையாளம் காணும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதாவது வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடையாதவர்கள் உட்பட அனைத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் பெற்றால் மொத்த பாதிக்கப்படடவர்கள் தொகை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.