கோலாலம்பூர், ஜனவரி 10 :
மலாக்கா மற்றும் ஜோகூரில் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது, இரு மாநிலங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை குறைந்துள்ளது, அதே நேரத்தில் பகாங்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமுமில்லை.
ஜோகூரில், நேற்று பிற்பகல் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்த 3,441 நபர்களுடன் ஒப்பிடுகையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 913 குடும்பங்களைச் சேர்ந்த 3,161 பேராகக் குறைந்துள்ளது.
ஜோகூர் மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஆர்.வித்யானந்தன் கூறுகையில், நான்கு மாவட்டங்களில் உள்ள 40 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர். செகாமாட் மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,246 பேர் தங்கியுள்ளனர், அதைத் தொடர்ந்து மூவார் (1,107), தங்காக் (678) மற்றும் பத்து பகாட் (130) பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
செகாமாட்டில் ஏழு பிபிஎஸ் மூடப்பட்டுள்ளது. மேலும் ஜோகூரிலுள்ள ஐந்து ஆறுகள் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளன என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் (APM), லெப்டினன்ட் கர்னல் (PA) Cuthbert John Martin Quadra கூறுகையில், மலாக்காவில் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 72 குடும்பங்களைச் சேர்ந்த 258 பேர் ஜாசினில் உள்ள 3 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
பகாங்கில், இன்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. மூன்று மாவட்டங்களில் உள்ள 4 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் 141 பேர் தங்கியுள்ளனர், இது நேற்றிரவில் இருந்து மாறவில்லை என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்துள்ளது.