கோவிட்-19 தடுப்பூசி செலுத்தாதவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறினால் கைது செய்யப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே எச்சரித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தாதவர்கள் அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதிக எண்ணிக்கையிலான பிலிப்பைன்ஸ் மக்கள் தடுப்பூசி போடாததைக் கண்டு திகைப்படைந்த பிலிப்பைன்ஸ் அதிபர், அங்குள்ள தடுப்பூசி செலுத்தாத சமூகத்தினருக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த வாரம் மணிலா மற்றும் பல மாகாணங்கள் மற்றும் நகரங்களில் அரசாங்கம் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. கடந்த இரண்டு நாட்களில் நோய்த்தொற்று எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்ததை அடுத்து, தலைநகரின் 13 மில்லியன் மக்களில் தடுப்பூசி போடப்படாதவர்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவிடப்பட்டனர்.
வரும் நாட்களில் நோய்த்தொற்றுகள் மேலும் அதிகரிக்கும் என்றும், மாத இறுதியில் அது உச்சத்தை எட்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.