சிறைச்சாலையில் குண்டுவெடிப்பு; நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தப்பியோட்டம்

சிரியா, ஜனவரி 21:

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள் ஹவெரன் சிறைச்சாலையில் இன்று குண்டுவெடிப்பு நடந்தப்பட்ட நிலையில், அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தப்பியோடியுள்ளதாக அனைத்துலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2011ஆம் ஆண்டு முதல் சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் ஈடுபட்டன.

இதனையடுத்து, 2019 ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்காவிற்கு சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்த குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் படைகள் பெரும் உதவி செய்தது. அத்துடன் , பிடிபட்ட ஐ.எஸ். தீவிரவாதிகளை கைதிகளாக சிறைகளில் அடைத்து அவர்களை கண்காணித்தும் வருகின்றனர்.

இதற்கிடையில், குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் வடகிழக்கு பகுதியில் ஹவெரன் என்ற சிறைச்சாலை உள்ளது. இந்த ஜெயிலில் நூற்றுக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், ஹவெரன் சிறைச்சாலையின் கதவு மீது இன்று காலை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் வேகமாக வந்து மோதியது. கார் வெடித்து சிதறியதால் சிறைச்சாலையின் கதவு சேதமடைந்தது.

அதன்பின்னர், அங்கு பதுங்கி இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் சிறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குர்திஷ் கிளர்ச்சியாளர் மீது தாக்குதல் நடத்தினர்.

மேலும், சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக தீவிரவாதிகளையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுதலை செய்தனர்.

இந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் சிறையில் இருந்து தப்பிச்சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here