குவாந்தான், ஜனவரி 26 :
பகாங்கில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை தண்ணீர் கட்டணம் செலுத்துவதில் இருந்து மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விலக்களிப்பின் மூலம் சுமார் 40,000 குடும்பங்கள் பயனடையும் என்றும் இதற்காக சுமார் RM1.5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கூறினார்.
“இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட வீடுகளை கழுவி சுத்தம் செய்த பிறகு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை குறைக்க இந்த கட்டண விலக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பகாங் கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது அத்தோடு இந்தாண்டு ஜனவரி 11ஆம் தேதி அன்று பேரழிவிலிருந்து முழுமையாக மீண்டது.
பகாங்கின் 10 மாவட்டங்களில் மொத்தம் 67,878 பேர் இவ்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.