கோவிட்-19 பரவாமல் தடுக்க, அனைத்து உடல்சார் நிகழ்வுகளையும் ஒத்திவைக்குமாறு சபா மாநில அரசு பரிந்துரை

கோத்தா கினாபாலு, பிப்ரவரி 10 :

கோவிட்-19 நோய்த்தொற்றுகள் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து உடல்சார் நிகழ்வுகளையும் ஒத்திவைக்க சபா மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

கோவிட் -19 தொற்றுக்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநிலச் செயலாளர் டத்தோஸ்ரீ சஃபார் அன்டோங் கூறினார்.

“கடந்த ஐந்து நாட்களில் தினசரி தொற்றுக்களின் போக்கு அதிகரித்துள்ளதோடு, நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (SOPs) மக்கள் இணங்காததால் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தொற்றுநோயைக் கட்டுப்படுத்த திட்டமிடப்பட்ட முறையான மற்றும் முறைசாரா அரசு கூட்டங்களை ஒத்திவைக்க அல்லது இயங்கலையில் (online) நடத்த பரிந்துரைக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

நிகழ்வு அல்லது கூட்ட அமைப்பாளருக்கு உடல்சார் வருகை தேவைப்பட்டால், நிகழ்விற்கு முன்னதாக தேவையான பரிசோதனைகளை செய்ய பங்கேற்பாளர்களைவழி நடத்த வேண்டும் என்று சஃபார் கூறினார்.

மேலும் நிகழ்வு இரண்டு மணி நேரத்திற்குள் மற்றும் வளாகத்தின் மூன்றில் ஒரு பங்கிற்குள் நடத்தப்பட வேண்டும் என்றார்.

நேற்று, சபாவில் மொத்தம் 3,333 புதிய கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here