50 ஆண்டுகளுக்கு பின் கனடாவில் அவசர நிலை பிரகடனம்!

ஒட்டாவா, பிப்ரவரி 15:

கனடாவில்  தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலுத்துவரும் நிலையில்  50 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லோரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லோரி ஓட்டுநர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது.

அதேபோல், அமெரிக்கா சென்று விட்டு திரும்பி வரும் லோரி ஓட்டுநர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என்று கனடா அரசு தெரிவித்தது. மேலும், கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளையும் அதிகரித்தது.

இதனிடையே, தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் லோரி ஓட்டுநர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது.

போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா – அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர். லோரிகள் பாலத்தில் நிறுத்தப்பட்டதால் கனடா – அமெரிக்கா இடையேயான போக்குவரத்து தடைபட்டது.

அதன்பின்னர், போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தி அம்பாசிடர் பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த லோரிகளை அப்புறப்படுத்தினர். இதன் பின்னரே, கனடா – அமெரிக்கா இடையேயான போக்குவரத்து சீரானது.

இந்நிலையில், லோரி ஓட்டுநர்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் கனடாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனட பிரதமர் ஜஸ்டின் டுருடோ நாட்டில் அவசர நிலையை பிறப்பித்தார்.

50 ஆண்டுகளுக்கு பின்னர் கனடாவில் பிறப்பிக்கப்படும் அவசர நிலை இதுவாகும். இதற்கு முன்னதாக 1980-ம் ஆண்டுவாக்கில் கனடாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

தற்போது, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டங்களில் ஈடுபடுவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதும், நிலைமையை கட்டுப்படுத்த இதுவரை ராணுவம் களமிறக்கப்படவில்லை. அவசர நிலை பிரகடனத்தால் கனடாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here