கோத்தா பாரு, பிப்ரவரி 26 :
கிளாந்தானின் நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், இன்று காலை 8 மணி வரை 881 பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (PPS) தஞ்சமடைந்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான கோலக்கிராய், தானா மேரா, ஜெலி மற்றும் பாசீர் மாஸ் ஆகிய இடங்களில் 21 தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சமூக நலத் துறையின் (JKM) பேரிடர் தகவல் போர்ட்டலின் அடிப்படையில், கோலக்கிராயில் 4 வெள்ள நிவாரண மையங்களும் தானா மேராவில் 8, ஜெலியில் 8 மற்றும் பாசீர் மாஸில் 1ம் திறக்கப்பட்டது.
வெளியேற்றப்பட்ட அனைவரும் 242 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், இதில் பெரியவர்கள் 294 ஆண்கள், 304 பெண்கள், 262 சிறுவர்கள் மற்றும் 21 குழந்தைகள் உள்ளனர்.
ஜெலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 535 பேராக உள்ளது. அதைத் தொடர்ந்து தானா மேரா 192 பேர், கோலக்கிராய் 136 பேர் மற்றும் பாசீர் மாஸ் 18 பேராகவும் உள்ளது.
இதற்கிடையில், ஜெலி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் முகமட் அட்னி இப்ராஹிம் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் சீக்கிரமாகவே வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடைந்தனர். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் கடினமான இடங்களிலும் கனமான நீரிலும் சிக்கியவர்களுக்கு உதவியது.
தங்கள் வீடுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள், விரைவாக வெளியேற நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.
மற்ற மாவட்டங்களை விட ஜெலியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், நாங்கள் மற்ற பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்து அப்பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
“குடியிருப்பாளர்கள் எப்போதும் தயாராக இருக்குமாறும், விரைவில் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் அவர்களுக்கு நாங்கள் எப்போதும் நினைவூட்டுகிறோம்,” என்று அவர் கூறினார்.