கோலாலம்பூர், மார்ச் 10 :
வடகிழக்கு பருவமழை ஆரம்பமானது முதல் நேற்று வரை, நாடு முழுவதும் மொத்தம் 313 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன என்று கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை (JMG) தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக கோலாலம்பூரில் 115 வழக்குகள் பதிவாகி, நாட்டிலேயே அதிக நிலச்சரிவுகள் இடம்பெற்ற இடமாக உள்ளது. அதைத் தொடர்ந்து சிலாங்கூரில் 70 வழக்குகள், பகாங் (43 வழக்குகள்), நெகிரி செம்பிலான் (28 வழக்குகள்), சபா (23 வழக்குகள்), சரவாக் (16 வழக்குகள்), திரெங்கானு (13 வழக்குகள்), மலாக்கா, ஜோகூர் மற்றும் பேராக்கில் தலா ஒரு வழக்குகளும் பதிவாகின என்று அது தெரிவித்துள்ளது.
“இதில் பெரும்பாலும் சரிவான அல்லது சாய்வான இடங்கள், சாலைகள், வீட்டுத் தோட்டங்கள் மற்றும் வனப் பகுதிகள் சம்பந்தப்பட்ட நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
“மேலும், அண்மையில் கிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு கல் குவாரியிலும் நிலச்சரிவு பதிவாகியுள்ளது, இதனுள் சில தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்,” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிலச்சரிவு நிகழ்வுகளைக் குறைக்க கேன்வாஸ்கள் மற்றும் தடுப்புகளை நிறுவுதல் உள்ளிட்ட ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தனியார் நில உரிமையாளர்களும் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் வீடுகளை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள இடிபாடுகளுக்கு, குறிப்பாக பத்து மலை மற்றும் ஷா ஆலாம் போன்ற இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள குடியிருப்பாளர்களை தற்காலிகமாக வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து நிலச்சரிவு அபாயத்தைக் குறைக்க, கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை தொழில்நுட்ப ஆலோசனைகளை எப்போதும் வழங்குகிறது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.