சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில், இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்!

புக்கிட் மெர்தாஜாம், மார்ச் 15 :

நேற்று நண்பகல், கம்போங் தேரூஸில் நெல் வயல் சாலையருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில், இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செபராங் பிறை தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஷாபி அப்துல் சமத் கூறுகையில், நேற்று நண்பகல் 2.49 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 11 மற்றும் 13 வயதுடைய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்கள் ஓட்டிவந்த Honda EX5 மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதால், சாலையின் இடதுபுறம் உள்ள புதர் பகுதியில் இருவரும் வீசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலும் உயிரிழந்த இரு சிறுவர்களும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், விபத்து ஏற்படுவதற்கு முன்பு அவர்கள் மோட்டார் சைக்கிளில் அவ்விடத்தை சுற்றிப்பாத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

“இந்தப் பகுதியில் நேரான சாலை என்பதாலும், நெற்பயிர்களின் இயற்கைக்காட்சியைக் காணவும் ஏராளமானோர் மோட்டார் சைக்கிள்களில் சுற்றிப்பார்க்க வருகிறார்கள்” என்று கம்போங் தேரூஸ் சமூக மேலாண்மை கவுன்சில் (MPKK) தலைவர் பஹாருதீன் அப்துல்லா தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த விபத்து தொடர்பான காணொளிப் பதிவு நேற்று பிற்பகல் முதல் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here