மலாக்கா, மார்ச் 15 :
இங்குள்ள ஜாலான் பெசிசிரான் பூங்கா ராயாவில், இன்று அதிகாலையில் மலாய்க்காரர் என நம்பப்படும் 40 வயதுடைய ஒருவர், காலை 7.20 மணியளவில் கடை கட்டிடத்தின் நடைபாதையில் இரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டார்.
மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் கிறிஸ்தோபர் பாடிட் இதுபற்றிக் கூறுகையில், தகவல் கிடைத்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தவுடன், பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஆடவர் சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், அவரை பரிசோதித்ததில், பாதிக்கப்பட்டவர் முகம் உட்பட உடலின் பல இடங்களில் காயங்களுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டது என்றார்.
மேலும், அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
“டாக்டரின் தகவலின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவருக்கு தலையில் இரத்தம் கசிவு உள்ளதாகவும் , உதடுகள் கிழிந்தும் வயிற்றில் உள்ள உறுப்புகள் சிதைந்தும் உள்ளன என்று கூறப்படுகிறது.
“அவர் தற்போது சிவப்பு மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்,” என்று அவர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த கிறிஸ்டோபர், இதுவரை பாதிக்கப்பட்டவரின் அடையாளம் காணப்படவில்லை எனவும், சம்பவத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.