கோலாலம்பூர், மார்ச் 17 :
2018 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி வரை, நாடு முழுவதும் உள்ள குடிநுழைவு துறை தடுப்பு முகாம்களில் மொத்தம் 208 இறப்புகள் பதிவாகியுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
செப்டிக் ஷாக், காசநோய், கடுமையான நிமோனியா, நுரையீரல் தொற்று, இதயச் சிக்கல், டிங்கி, சர்க்கரை நோய், சுவாசக் கோளாறு, உறுப்பு செயலிழப்பு, மற்றும் கோவிட்-19 தொற்று வழக்குகள் (25) போன்றவற்றின் காரணமாக அவர்கள் இறந்ததாக உள்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் முகமட் கூறினார்.
“குடிநுழைவு துறை தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, சிறந்த சேவைகளை வழங்குவதற்கு அரசாங்கம் எப்போதும் உறுதி கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வின் போது, ”குடிநுழைவு துறை தடுப்பு முகாம்களின் உள்ள தடுப்பு மேலாண்மை நடைமுறைகள், குடிநுழைவு துறை டிப்போக்களின் நிர்வாகம் மற்றும் மேலாண்மை குறித்த குடிவரவு நிலைப்பாடு அறிவுறுத்தல்களின்படியே நடைபெறுகின்றன ” என்று அவர் கூறினார்.
கடந்த ஐந்தாண்டுகளில் குடிநுழைவு துறை தடுப்பு காவலில் ஏதேனும் மரணங்கள் நடந்துள்ளனவா என்றும், அதுபோன்ற சம்பவங்களை விசாரித்து தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிய விரும்பிய டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைத் (BN-பெங்காராங்) கேட்ட கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
குடிநுழைவுத் திணைக்களம் சுகாதார அமைச்சின் (MOH) ஒத்துழைப்புடன், கைதிகளுக்கு ஆரம்பகால மருத்துவச் சேவையை வழங்குவதற்காக, நாடு முழுவதும் உள்ள குடிநுழைவு துறை தடுப்பு முகாம்களில் U29/32 தரம் வாய்ந்த 25 உதவி மருத்துவ அதிகாரிகளை வைத்துள்ளதாக இஸ்மாயில் கூறினார்.
தற்போதுள்ள களஞ்சியசாலைகளை மேம்படுத்தும் பணிகளின் போது, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் பொருத்தமான இடம் மற்றும் வசதிகளை வழங்குவதன் மூலம் அரசாங்கம் தொடர்ந்து முன்னேற்றங்களைச் செய்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
“அவசர மற்றும் தீவிர நோய்களால், பாதிக்கப்பட்ட கைதிகள் அருகிலுள்ள மாவட்ட சுகாதார மையம் அல்லது சுகாதார மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அனைத்தும் MOH நிர்ணயித்த நிலையான இயக்க நடைமுறைகளின்படி செய்யப்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.
சிறைத் துறைகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC ), Suka Society மற்றும் MyCare போன்ற உள்ளூர் மற்றும் சர்வதேச அரசு சாரா அமைப்புகளுடன் (NGOs) கைதிகளை நிர்வகிப்பதில் மற்றும் அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த அமைச்சகம் தொடர்ந்து அமர்வுகளை நடத்துகிறது என்று இஸ்மாயில் கூறினார்.
இதற்கிடையில் லிம் லிப் பெங்கின் (PH-கேப்போங் ) துணைக் கேள்விக்கு பதிலளித்த அவர், கைதிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள 18 குடிநுழைவு துறை தடுப்பு முகாம்களில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டுள்ளன என்றார்.