கலிபோர்னியா, மார்ச் 18:
NFT (NON FUNGIBLE TOKEN) என்பது ஒரு தனிப்பட்ட நபரின் பிரத்யேக பாடல்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் என எந்தவித படைப்பாக இருந்தாலும் அந்த படைப்புகளுக்கான உரிமையை அவர் டிஜிட்டல் சான்றிதழ்களாக பெறமுடியும்.
இதன் மூலம் அனைவருக்கும் ஒரு பிரத்தியேக படைப்புகளின் உரிமையாளர் யார் என்பதை எளிதில் கண்டறிய முடியும். அவரிடம் இருந்து அந்த படைப்புகள் அல்லது பொருள்களை பெறுவதற்கு மற்ற நபர்கள் விலை கொடுக்க வேண்டும். சமீப காலங்களில் NFT பல லட்சங்களுக்கு விலை போகிறது.
இந்த நிலையில் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இந்த வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமீபத்தில் அவர் பேசும் போது, ” விரைவில் இன்ஸ்டாகிராம் தளத்தில் NFT யை அறிமுகம் செய்யும் திட்டம் உள்ளது. அதே நேரத்தில் அது தொடர்பாக இன்னும் பல்வேறு பணிகள் மீதம் இருக்கின்றன” என தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் டூவிட்டர் நிறுவனம் NFT வசதியை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது அது இன்ஸ்டாகிராமில் விரைவில் அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.