கோலா திரெங்கானு, மார்ச் 24 :
இந்த ஆண்டு இணைய மோசடி வழக்குகள் சம்பந்தப்பட்ட 301 வணிக குற்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட RM7 மில்லியன் இழப்புகளை காவல்துறை பதிவு செய்துள்ளது.
திரெங்கானு காவல்துறைத் தலைவர் டத்தோ ரோஹைமி முஹமட் இசா இதுபற்றிக் கூறுகையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 32 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் கடந்தாண்டு 228 வழக்குகள் RM6.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறினார்.
மாநிலத்தில் வணிக குற்றங்கள் முக்கியமாக ஆன்லைன் மோசடிகளான மக்காவ் ஸ்கேம், இ-பர்ச்சேஸ், லவ் ஸ்கேம் மற்றும் இ-இன்வெஸ்ட்மென்ட் போன்றவற்றுடன் தொடர்புடையது, ஒவ்வொரு ஆண்டும் வழக்குகள் அதிகரித்து வருவதால், இது மிகவும் தீவிரமாகி வருவதாக அவர் கூறினார்.
“இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும், கிட்டத்தட்ட RM1.5 மில்லியன் நஷ்டத்துடன் ‘மக்காவ் ஸ்கேம்’ தொடர்பான மூன்று புகார்களைப் பெற்றோம்.
“முதல் வழக்கில் RM736,000 இழந்த ஒரு பெண் ஆசிரியை, இரண்டாவது பாதிக்கப்பட்ட பெண் RM532,000 இழந்தார்.
“இதற்கிடையில், மூன்றாவது பாதிக்கப்பட்டவர், கண் இமைக்கும் நேரத்தில் RM200,000 இழந்தார். இவர் ஓய்வு பெற்ற ஓர் ஆண்,” என்று அவர் இன்று, கெடாய் பயாங் சென்ட்ரல் மார்க்கெட்டில் ஆன்லைன் மோசடி குற்றத் தடுப்பு பிரச்சாரத்திற்குப் பிறகு,செய்தியாளர்களிடம் கூறினார்.
அவருடன் திரெங்கானு வணிக குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர், கண்காணிப்பாளர் எம் ஜாம்ப்ரி மஹ்மூட் ஆகியோர் உடனிருந்தனர்.
இதன் விளைவாக, இந்த ஆண்டு தமது இலக்கு, பேச்சுக்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் காவல்துறையினர் தங்கள் தடுப்பு முயற்சிகளை இரட்டிப்பாக்குவார்கள் என்று அவர் கூறினார்.
“அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் (IPT) இந்தக் குற்றத்தைப் பற்றிய விழிப்புணர்வு குறித்த பேச்சுக்கள் அல்லது விளக்கங்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறேன், குறிப்பாக ஆன்லைன் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து குற்றச்செயல்களால் பாதிக்கப்படும் சமூகத்தினருக்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மசூதிகள், பொது இடங்கள் மற்றும் வணிக வளாகங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும்,” என்றார்.
ஆன்லைன் மோசடி குற்றங்கள் சில குழுக்களை மட்டும் குறிவைக்கவில்லை, மாறாக தொழில் வல்லுநர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.