ஜகார்த்தா, ஏப்ரல் 1 :
மலேசியாவும் இந்தோனேசியாவும் ஒரு நாள் ஆசியான் மொழியாக மாறக்கூடிய மலாய் மொழியின் நிலையை உயர்த்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
ஒவ்வொரு அனைத்துலக மாநாட்டிலும் மலாய் மொழியை தொடர்பு மொழியாக பயன்படுத்த, இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
“எங்களுக்கு பொதுவானதும் உறுதியானதுமான தொடர்பு கொண்ட மலாய் மொழியை மேம்படுத்த மலேசியாவுடன் உடன்பட்டதற்காக இந்தோனேசிய அதிபருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்” என்று இஸ்மாயில் சப்ரி மேலும் கூறினார்.
மலேசியா, இந்தோனேசியா, புருனே, தெற்கு தாய்லாந்து, கம்போடியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மலாய் மொழி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
இந்தோனேசிய வீட்டு உதவியாளர்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் இன்று கைச்சாத்திடப்பட்டதை நேரில் பார்த்த பின்னர், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுடன் இணைந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பிராந்திய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் ரோஹிங்கியா பிரச்சினைக்கு மியன்மார் அரசாங்கமே உள்நாட்டில் தீர்வு காண வேண்டும் என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக இஸ்மாயில் சப்ரி கூறினார்.
மலேசியாவில் 200,000 மியன்மார் ரோஹிங்கியா அகதிகள் இருப்பதால் மலேசியாவிற்கு இது ஒரு பெரிய பிரச்சினையாகும், என்று பிரதமர் தெரிவித்தார்.









