கொழும்பு, ஏப்ரல் 2 :
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தினமும் 13 மணி முதல் 15 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிகளுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த முடிவுகளே காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கோத்தபாய பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளதுடன் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை 36 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.









