கோலாலம்பூர், ஏப்ரல் 28 :
இங்குள்ள செராஸ், பண்டார் துன் ரசாக்கில் உள்ள அவர்களது வீட்டின் முன், மூதாட்டி மற்றும் அவரது மகள் மீது ஆயுதங்களைப் பயன்படுத்தி, சங்கிலி, வளையல்களை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு நண்பர்கள் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டனர்.
34 வயதான முஹமட் இக்பால் அலி பக்கர் மற்றும் 29 வயதான அபு முக்சிம் பதருல் ஷாம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள், நீதிபதி இஸ்ரலிசாம் சனுசி முன்னிலையில் வாசிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொள்ளாது விசாரணை கோரினர்.
அவர்கள் ஷோபியா ஹம்சா, 77, மற்றும் அவரது மகள் நோர் தைபா தாஜிம், 34, ஆகியோரிடம் மார்ச் 26 அன்று கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 395/397 இன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
துணை அரசு வக்கீல் முஹமதட் அய்மான் அசாஹான் ஒவ்வொரு குற்றவாளிக்கும் கூடுதல் நிபந்தனைகளுடன் RM15,000 ஜாமீன் வழங்குமாறு நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார், அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இஸ்லீன் இஸ்மாயில் மற்றும் சியா அஸ்லான் அப்துல்லா ஆகியோர் தங்கள் கட்சிக்காரர்களுக்கு நிரந்தர வேலை இல்லை என்றும் அவர்களின் தாயை கவனித்துக் கொள்ளவேண்டியும் இருப்பதால், அவர்களுக்கு குறைந்த ஜாமீன் வழங்குமாறு விண்ணப்பித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் RM6,000 ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதித்தது, மேலும் மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சமூகம் அளிக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன், வழக்கை மீண்டும் மே 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது
மார்ச் 26 அன்று, செராஸ் மாவட்ட காவல்துறையின் தலைமை துணை ஆணையர் முஹமட் இட்ஸாம் ஜாஃபரை தொடர்பு கொண்டபோது, தனது மகளுடன் சாப்பிட வெளியே செல்ல விரும்பிய மூதாட்டிக்கு கையில் காயங்கள் ஏற்படுத்தி RM25,000 மதிப்புள்ள நகைகளை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் கத்தியுடன் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறினார்.
முஹமட் இட்ஜாமின் கூற்றுப்படி, கொள்ளைச் சம்பவம் பொதுமக்களால் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பரவியது, சந்தேக நபர் இரண்டு நெக்லஸை இழுத்தும், பாதிக்கப்பட்டவரின் வளையலின் இரண்டு இழைகளை கத்தரிக்கோலால் அறுத்தும், போலி பதிவு எண்ணுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது போன்ற காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.









