ஜோகூர் பாரு, ஏப்ரல் 29 :
இன்று காலை ஜாலான் இப்ராஹிம் சுல்தானில் உள்ள பொழுதுபோக்கு வளாகத்தில், தேசிய மறுவாழ்வுத் திட்டத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) மீறியதற்காக 145 நபர்களுக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சோதனைக்கு தலைமை தாங்கிய ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமத் இதுபற்றிக் கூறியபோது, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களுக்கும் தலா 1,000 வெள்ளி அபராதம் என்ற அடிப்படையில் மொத்தம் RM145,000 தொகையை அபராதமாக வழங்கியதாகக் கூறினார்.
மேலும், நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களை உள்ளடக்கிய ஆறு நபர்களை போலீசார் தடுத்து வைத்துள்ளனர், அவர்களில் நால்வருக்கு போதைப்பொருள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மற்ற இருவரும் வளாகத்தின் பராமரிப்பாளர் மற்றும் தேடப்படும் பட்டியலில் உள்ள சந்தேக நபரை உள்ளடக்கியதாக அவர் கூறினார்.
“இந்தச் சோதனையில், 17 முதல் 50 வயதுக்குட்பட்ட 145 பேருக்கு எதிராக மொத்தம் RM145,000 அபராதம் விதிக்கப்பட்டது.
“அவர்களில் ஆறு சிங்கப்பூரர்கள், மூன்று வியட்நாமியர்கள் மற்றும் ஒரு இந்தோனேசியரும் அடங்குவர்” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.










