உலு சிலாங்கூர், மே 16 :
இன்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, இங்குள்ள கோலா குபு பாருவின் கம்போங் ஜாவா கெர்லிங்கில் குறைந்தது 20 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 3.45 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார்.
அவரது கூற்றுப்படி, ஏழு அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட கோலா குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு இயந்திரம், நான்கு சக்கர டிரைவ் மற்றும் படகு என்பன சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
“வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஒரு குழந்தை உட்பட மூன்று குடியிருப்பாளர்களை பாதுகாப்பாக வெளியேற்ற அக்குழு உதவியது.
“தீயணைப்பு குழுவினர் செல்ல முன்னர் பல குடியிருப்பாளர்கள் வெள்ளம் காரணமாக வெளியேறி உள்ளனர். இதுவரை 15 முதல் 20 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.