கணக்கெடுப்பே நடத்தாமல் இந்து, முஸ்லிம் மக்கள் தொகையை மத்திய அரசு எப்படி கணித்தது? -தேஜஸ்வி யாதவ் கேள்வி!

மக்கள் தொகை கணக்கெடுப்பே நடத்தாமல் இந்து – முஸ்லிம் மக்கள்தொகை குறித்து மத்திய அரசு எவ்வாறு தீர்மானத்துக்கு வந்தது என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

1950 – 2015-க்கு இடையில் இந்துக்களின் மக்கள்தொகை குறைந்துள்ளதாகவும், முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்ந்துள்ளதாகவும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் (இஏசி-பிஎம்) ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி 1950 – 2015க்கு இடையில் நாட்டின் மக்கள் தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை 84.68 சதவீதத்தில் இருந்து 7.82 சதவீதம் குறைந்து 78.06 சதவீதமாக உள்ளது. அதேசமயம் முஸ்லிம்கள் எண்ணிக்கை 9.84 சதவீதத்திலிருந்து 14.09 சதவீதமாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் எவ்வாறு இந்து, முஸ்லிம் எண்ணிக்கை ஆய்வை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமலேயே எண்ணிக்கையை அடைந்துவிட்டீர்களா? 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லையா? நீங்கள் நாட்டின் பிரதமர். இந்து முஸ்லிம் விவகாரத்தை தவிர்த்துவிட்டு, தயவுசெய்து நாட்டில் நிலவும் பிரச்சினைகளைப் பற்றி பேசுங்கள்.

அதிகரித்து வரும் வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து பிரதமரோ அல்லது பாஜக தலைவர்களோ பேச மாட்டார்கள். பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து பிரதமர் பேச மாட்டார். மோடி தலைமையிலான மத்திய அரசு சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அவர்கள் அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறார்கள். சமூகத்தில் பிளவுகளை உருவாக்கும் சக்திகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here