கூலாய், மே 19 :
இந்து சமய சிலையை குப்பை தொட்டியில் வீசியதாக நம்பப்படும் நபரை போலீசார் தேடி வருகின்றனர், இது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கூலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் தோக் பெங் இயோவின் கூற்றுப்படி, மே 15 ஆம் தேதி அன்று சிலையின் உரிமையாளரிடமிருந்து இந்த சம்பவம் தொடர்பான போலீஸ் அறிக்கையை அவரது துறை பெற்றது என்றார்.
அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அதே நாளில், ஜோகூரில் உள்ள சேனாய், தாமான் சைன்டெக்ஸில் உள்ள புகார்தாரரின் வீட்டின் முன் காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
“அலங்கார நோக்கங்களுக்காக மட்டுமே மதச் சிலை தனது வீட்டின் முன் முற்றத்தில் வைக்கப்பட்டுள்ளதாக புகார்தாரர் கூறினார்” என்று தோக் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சிலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், அது பழைய இடத்திலேயே வைக்கப்பட்டது என்றும் புகார்தாரர் போலீசாரிடம் கூறியதாகவும் அவர் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் 427 வது பிரிவின் கீழ் குற்றச்செயல் செய்ததற்காக வழக்கை விசாரிக்க சிசிடிவி பதிவின் நகலை போலீசார் எடுத்துக்கொண்டதாக தோக் மேலும் கூறினார்.
முன்னதாக, சந்தேக நபர் செய்த செயலை காட்டும் 42 வினாடிகள் நீளமான கிளிப் ஒன்று கிருஷ்ணமூர்த்தி விச்சு என்ற பயனரால் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.