லங்காவி, மே 19 :
நேற்றிரவு இங்குள்ள பந்தாய் சேனாங்கைச் சுற்றியுள்ள வணிக வளாகத்தில், மலேசியக் குடிவரவுத் துறை (JIM) மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையில் 24 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
16 முதல் 43 வயதுக்குட்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் அனைவரும் ஒன்பது இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று குடிவரவுத் துறையின் கெடா மாநில துணை இயக்குநர், ரோஸ்மலிசா முஹமட் ரஷித் தெரிவித்தார்.
அவர்களில் 7 சிரியர்கள், 5 ஏமன் நாட்டவர்கள் , 5 வங்காளதேசிகள், 3 பாகிஸ்தானியர்கள், 2 எகிப்தியர்கள் மற்றும் மியான்மர் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர்.
“முதற்கட்ட ஆய்வில், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் தங்களது பாஸ் அல்லது பெர்மிட்களை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுவதாகவும், அந்த வளாகத்தில் பணிபுரிய அவர்களுக்கு செல்லுபடியான பாஸ் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மலேசியக் குடிவரவுத் துறையின் கெடா மாநிலத்தை சேர்ந்த 21அதிகாரிகள் இணைந்த இந்த நடவடிக்கை, இரவு 9 மணிக்கு தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக ரோஸ்மலிசா கூறினார்.
“இந்த வழக்கு குடிவரவு சட்டம் 1959/63 பிரிவு 6 (1) (c) மற்றும் பிரிவு 15 (1) (c) மற்றும் குடியேற்ற விதிமுறைகள் 1963 இன் விதிமுறை 39 (b) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.