குரூன், மே 25 :
மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் (KPDNHEP) நேற்று இரும்புப் பட்டறையில் நடத்திய சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19,401 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.
டீசல் மற்றும் பெட்ரோலை தவறாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வளாகத்தில், KPDNHEPயின் அலோர் ஸ்டார் மாவட்ட அமலாக்க அதிகாரிகள் குழு, நேற்று மாலை 5.25 மணியளவில் சோதனையை நடத்தியது.
அதன் இயக்குநர் அஃபெண்டி ரஜினி காந்த் கூறுகையில், குரூன் பகுதியில் நடந்த செயல்பாடுகள் குறித்து தங்கள் துறையினர் நான்கு வாரங்களுக்கு முன்பிலிருந்தே உளவு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
“சோதனையின் போது, வளாகம் இயங்கி வருவதையும், லோரியில் உள்ள கூடுதல் டேங்கிலிருந்து டீசலை எடுத்து வளாகத்தில் உள்ள ஃபைபர் டேங்கிற்கு மாற்றும் பணியில் ஒருவர் ஈடுபட்டு இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஃபைபர் டேங்கில் மொத்தம் 19,401 லிட்டர் டீசல் இருந்தது. ஆதாரங்களின் அடிப்படையில், அந்த வளாகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை சேமிப்பதற்கான அனுமதி மற்றும் செல்லுபடியாகும் உரிமம் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.
“KPDNHEP அமலாக்க அதிகாரிகள் அங்கிருந்த ஒரு லோரி, லோரியின் கூடுதல் டேங்க், ஒரு மின்சார பம்ப் மற்றும் RM71,700 மதிப்புள்ள 19,401 லிட்டர் டீசல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்,” என்றார்.
கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை வைத்திருப்பதற்கு அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் பரிவர்த்தனைகளை நடத்துவதற்காக எந்த உரிமமும் இல்லாமல், விநியோக கட்டுப்பாடு விதிகள் 1974 இன் 3 (1) உடன் இணைந்து படிக்கப்பட்ட குற்றத்தை செய்யும் நோக்கத்துடன் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காக, விநியோக கட்டுப்பாடு சட்டம் 1961 இன் பிரிவு 21 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
மேலும் “கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை அனுமதியின்றி ஒரு இடத்தில் சேமித்து வைப்பதற்காக அதே சட்டத்தின் பிரிவு 20 (1) இன் கீழ் விசாரணைகளும் நடத்தப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.