குடும்பத்தினரின் அய்டில்ஃபித்ரி திறந்த இல்லத்தில் இருந்த மூன்று வயது குழந்தையை காணவில்லை

குவாந்தான், மே 28 :

நேற்று வெள்ளிக்கிழமை (மே 27) இரவு, புக்கிட் ரங்கின் ராஃப்ட் ஹவுஸில் அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த அய்டில்ஃபித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் இருந்த மூன்று வயது குழந்தை காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் வான் முகமட் ஜஹாரி வான் புஸு கூறுகையில், மாஜமான குழந்தையான சித்தி நூர் அத்தியா சோஃபியா முகமட் சுக்ரி என்பவர், இரவு 11.15 மணியளவில் அவரது தந்தையால் கடைசியாகப் பார்க்கப்பட்ட பின்னர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.

“காணாமல்போன குழந்தை அக்குடும்பத்தினரின் ஒரே பிள்ளை என்றும் விழாவில் அவர் சிவப்பு நிற பாஜு குருங் அணிந்திருந்ததாக அறிவிக்கப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட அனைத்து விருந்தினர்களிடமும் தாம் மகள் பற்றிக் கேட்டதாகவும் ஆனால் யாரும் அவளைப் பார்த்ததை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவரது தந்தை கூறினார்.

“அதைத் தொடர்ந்து, காணாமல் போன குழந்தையின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார்,” என்று அவர் இன்று (மே 28) வெளியிட்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

போலீசார் காணாமல்போன குழந்தையை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர், மேலும் இந்த வழக்கு காணாமல் போன நபராக வகைப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) இஸ்மாயில் அப்துல் கானி கூறுகையில், இன்று அதிகாலை 3.23 மணியளவில் அருகிலுள்ள ஆறு மற்றும் ஆற்றங்கரையோரங்களில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஒரு குழு ஈடுபடுத்தப்பட்டது.

மேலும் குழந்தையின் தந்தைக்கு சொந்தமான இரண்டு படகு வீடுகள் இரண்டையும் இணைக்கும் விதமாக நடுவில் மரப் பாலம் உள்ளது. எனவே காணாமல்போன குழந்தை தவறி ஆற்றில் விழுந்திருக்கலாம் என்ற சாத்தியத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு தேடுதல் நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here