கோலாலம்பூர், மே 31:
வெளிநாடுகளில் இருந்து பயிற்சி பெற்ற தாதியர்களை பணியமர்த்த அனுமதிக்க வேண்டும் என்று மலேசியாவின் தனியார் மருத்துவமனைகள் சங்கம் (APHM) விடுத்த கோரிக்கையை சுகாதார அமைச்சகம் பரிசீலிக்கும் என்று துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலி கூறினார்.
மலேசியாவில் சிறப்பு மருத்துவத் துறைகளில் பயிற்சி பெற்ற தாதியர்களின் பற்றாக்குறையைத் தொடர்ந்து, இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“ஒரு காலத்தில், வெளிநாட்டில் இருந்து பயிற்சி பெற்ற தாதியர்களை வேலைக்கு அமர்த்த சுகாதாரத்துறை அனுமதித்திருந்தது, பின்னர் அச்செயல்முறை அனுமதிக்கப்படவில்லை, இந்த விஷயத்தை நான் அமைச்சர் (கைரி ஜமாலுதீன்) ஜெனிவாவிலிருந்து திரும்பியதும் விவாதத்திற்கு கொண்டு வருவேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
மலேசியாவின் தனியார் மருத்துவமனைகள் சங்கத்தின் 28-ஆவது அனைத்துலக சுகாதார பாதுகாப்பு மாநாடு மற்றும் கண்காட்சி 2022 ஐ , இன்று இங்கு நடத்திய பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார்.