காரின் பின்பக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்

கோலாலம்பூர், ஜூன் 20 :

கோம்பாக் நோக்கிச் செல்லும் டூத்தா-உலு கேளாங் விரைவுச் சாலையில் (Duke) 3.2 ஆவது கிலோமீட்டரில், பெரோடுவா மைவி காரின் பின்புறம் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

காலை 9.35 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 26 வயதுடைய நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர், துணை ஆணையர் சரிபுடின் முகமட் சாலே கூறுகையில், ஆரம்ப விசாரணையில் 27 வயதான பெரோடுவா மைவி கார் ஓட்டுநர் கோத்தா டாமன்சாராவிலிருந்து ஷாமெலின் மால் நோக்கி பயணித்தபோது, இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறினார்.

அவரது கூற்றுப்படி, DUKE நெடுஞ்சாலை வழியாகச் சென்றபோது, ​​பாதிக்கப்பட்டவர் ஓட்டிய மோட்டார் சைக்கிள் அவரது காரின் பின்புறத்தில் மோதியது.

“விபத்தின் விளைவாக, பலத்த காயங்களுக்கு ஆளான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்தார், அதே நேரத்தில் கார் ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

“இந்த வழக்கு 1987 சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 41 (1) இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள், ஜாலான் துன் எச்எஸ் லீ போக்குவரத்து காவல் நிலையத்தை 03-2071 9999, JSPT கோலாலம்பூர் ஹாட்லைன், 03-20260267/69 அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here