கோலாலம்பூர், ஜூன் 20 :
முஹிடினுக்கு கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் RM1.3 மில்லியனை, பெர்சாத்து கட்சி பெறவில்லை என்று அக்கட்சியின் முன்னாள் தலைவரான துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
முகைதின் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.
2018 ஆம் ஆண்டு ஜூன் 4, ஜூலை 4 மற்றும் ஆகஸ்ட் 23 ஆகிய தேதிகளில் மூன்று தவணைகளாக அல்ட்ரா கிரானா சென்டிரியன் பெர்காட்டின் (UKSB) மூலம் முஹிடினுக்கு RM1.3 மில்லியன் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்தப்பணம் அரசியல் நன்கொடையாக இருப்பின் அது கட்சி நிதியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால், கட்சியின் பொருளாளரிடம் அப்பணம் சென்றடையவில்லை என்று மகாதீர் கூறினார்.
பணம் கொடுத்ததாக கூறப்படும் காலத்தில் (2018) பெர்சாத்து கட்சியின் தலைவராக துன் டாக்டர் மகாதீர் முகமட் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
UKSB இன் முன்னாள் நிர்வாக மேலாளர் டேவிட் டான் ஜூன் 17 அன்று, அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான ஊழல் விசாரணையின் போது இதை வெளிப்படுத்தினார்.
ஆனால் அக்காலகட்டத்தில் தான் புற்று நோய் சிகிச்சையில் இருந்ததாக கூறி, அக்குற்றச்சாட்டுக்கு முஹிடின் யாசின் மறுப்புத் தெரிவித்துள்ளார்.