பாலிங், ஜூலை 5 :
இங்குள்ள கம்போங் இபோயில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் மூன்றாவது உடல், இன்று காலை 11.55 மணியளவில் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட கைருல் இக்வான் நோர் அஸ்மான், 14, என்பவரது உடல் அவரது தாயார் சல்மா மாட் அகிப், 53 மற்றும் அவரது மைத்துனி நூருல் அனிஸ் அபு ஹாசன், 23 ஆகியோரின் உடல்களுக்கு வெகு தொலைவில் மரக்குவியல்களின் கீழ் கண்டெடுக்கப்பட்டது.
கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமை இயக்குநர், துணை தீயணைப்பு ஆணையர் சயானி சைடன் கூறுகையில், மூன்றாவது உடலும் சரியான நிலையில் காணப்பட்டது, வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றார்.
முன்னதாக, சல்மா மற்றும் நூருல் அனிஸ் ஆகியோரின் உடல்கள், அவர்களின் வீட்டின் இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள சுங்கை இபோய்க்கு அருகில், மரக் குவியல்களின் கீழ் தீயணைப்பு வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டன.
மரக் குவியல்களுக்கு அடியில் உயிரிழந்த ஒருவரின் கால்களை தீயணைப்புப் படையினர் பார்த்ததையடுத்து, அவ்விருவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டன என்றார்.