அலோர் ஸ்டார், ஜூலை 6 :
கடந்த திங்கட்கிழமை (ஜூலை 4) பாலிங் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் காரணமாக, “கூலிம் ஹைடெக் பார்க் நீர் சுத்திகரிப்பு ஆலை (LRA) மற்றும் புக்கிட் பினாங்/சுங்கை பட்டாணி நீர் சுத்திகரிப்பு ஆலை ஆகியவற்றின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன”, என்று கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனுசி முகமட் நோர் தெரிவித்துள்ளார்.
மேற்கூறப்பட்ட இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) இரவு 10.50 மற்றும் 11.10 மணிக்கு முழுமையாக மூடப்பட்டதாக அவர் இன்று வெளியிட்டுள்ள தனது பேஸ்புக்கில் ஒரு பதிவின் மூலம் கூறினார்.
“இந்த தற்காலிக பணிநிறுத்தங்கள் கூலிம் ஹைடெக் பூங்காவில் உள்ள 80,000 நுகர்வோரையும், பினாங் துங்கல்/சுங்கை பட்டாணியில் உள்ள 121,000 பயனர்களையும் பாதிக்கும்.
எனவே “நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மூடல்களின் விளைவாக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சயாரிக்காட் ஆயிர் தாருல் அமான் (SADA) லோரிகள் மற்றும் டேங்கர்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும்” என்று அவர் கூறினார்.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, இந்த வெள்ளத்தில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன் 1,400 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் மூன்று தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 7 வீடுகள் முற்றாக அழிந்தன மற்றும் சுமார் 70 வீடுகள் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.