பாங்காக், ஜூலை 10 :
இந்த ஆண்டு இதுவரை கம்போடியாவில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளால் ஏமாற்றப்பட்டதாக நம்பப்படும் 46 மலேசியர்களை மீட்டுள்ளதாக, கம்போடியாவிற்கான மலேசிய தூதர் எல்டீன் முகமட் ஹூசைனி முகமட் ஹூஷிம் தெரிவித்துள்ளார்.
“மேலும் 60க்கும் மேற்பட்ட மலேசியர்கள் வேலை மோசடிகளால் ஏமாற்றப்பட்டு அங்கு சிக்கிக் கொண்டுள்ளதாகவும், மீட்கப்பட்டவர்கள் நாடு திரும்புவதற்கு வசதியாக கம்போடிய அதிகாரிகளுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்,” என்று மலேசிய தூதர் கூறினார்.
2018 ஆம் ஆண்டில், தூதரகம் இதேபோன்ற இக்கட்டான நிலையில் இருந்த 47 மலேசியர்களுக்கு உதவியது மற்றும் அதிர்ஷ்டவசமாக 2020 மற்றும் 2021 இல் COVID-19 தொற்றுநோய்களின் போது எல்லைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வாறு வேலை மோசடியால் ஏமாற்றப்பட்ட எந்த வழக்குகளும் பதிவாகவில்லை என்றார்.
கம்போடியாவில் அதிக ஊதியம் பெறும் வேலைகளை வழங்குவதாகக் கூறப்படும் மோசடிக் கும்பல்களால் ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படும் 29 முதல் 41 வயதுக்குட்பட்ட நான்கு மலேசியர்கள், நேற்று சனிக்கிழமை (ஜூலை 9) கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர் என்று அவர் மேலும் கூறினார்.
மோசடிக்கும்பல் மூலமாக ஏமாற்றப்பட்ட மலேசியர்களுக்கு தாம் என்ன வேலை செய்யப்போகிறோம் என்று தெரியாது என்றும், அவர்கள் அங்கு சென்றதும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களை எவ்வாறாவது நம்பவைத்து பணத்தினை பெற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்கு மோசடி கும்பல்களால் கட்டாயப்படுத்தப்பட்டது என்று அறிய முடிகிறது.
இவ்வாறு கிடைத்த வேலையை நம்பி கம்போடியா சென்ற பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர், ஆனால் அவர்கள் மலேசியாவுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை, மேலும் அவர்கள் அதனையும் மீறி விடுதலை பெற வேண்டுமாயின், அவர்களது குடும்பத்தினர் அவர்களை மீட்பதற்கு அவர்களால் கூறப்படும் ரொக்கத் தொகையை செலுத்த வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இதற்கிடையில், வெளிநாடுகளில் லாபகரமான ஊதியத்தை உறுதியளிக்கும் வேலை ஆட்சேர்ப்பு விளம்பரங்களில் கவனமாக இருக்குமாறு எல்டீன் மலேசியர்களை வலியுறுத்தினார்.