கோத்தா பாரு, ஜூலை 16 :
நேற்றிரவு பாசீர் மாஸில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சோதனைகள் மூலம் 11 சட்டவிரோத குடியேறிகளை போலீசார் கைது செய்தனர்.
பொது நடவடிக்கைப் படையின் பட்டாலியன் 9 மற்றும் பட்டாலியன் 7 உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் உளவுத்துறை மற்றும் ரோந்துப் பணிகளின் விளைவாக, மேற்கொண்ட இந்த சோதனையில் 15 முதல் 36 வயதுக்குட்பட்ட அனைத்து சட்டவிரோத குடியேற்றவாசிகளையும் கைது செய்ய முடிந்தது.
கிளாந்தான் காவல்துறை பதில் தலைவர், டத்தோ முகமட் ஜாக்கி ஹருன் கூறுகையில், இரவு 8.30 மணியளவில் பாசீர் மாஸில் உள்ள கம்போங் பாங்கோல் கூலிமில் உள்ள ஒரு வீட்டில் முதல் சோதனை நடத்தப்பட்டது.
“அவ்வீட்டைச் சோதனை செய்ததில், 15 முதல் 27 வயதுடைய 5 சட்டவிரோத குடியேறிகளை தடுத்து வைத்தனர்.
“அடையாள ஆவணங்கள் ஏதும் இல்லாத அனைவரும் கைது செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக ரந்தாவ் பாஞ்சாங் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அடுத்து, லுபோக் காவாவில் இரவு 11.30 மணியளவில் ஜெராம் பெடா, பாசீர் மாஸில் சந்தேகத்திற்குரிய நிலையில் காணப்பட்ட நிசான் SUV வாகனத்தை பார்த்த பின்னர், 9 பிஜிஏ பட்டாலியன் உறுப்பினர்கள் கொண்ட குழு சோதனை மேற்கொண்டது என்று முகமட் ஜாக்கி கூறினார்.
ஆனால் அங்கு அதிகாரிகள் இருப்பதை உணர்ந்து வாகன ஓட்டுநர் மெரண்டியை நோக்கி வாகனத்தை வேகமாக செலுத்தினார்.
“லுபோக் காவா கிராம சாலையில் வந்தபோது, போலீசார் அந்த வாகனத்தை சாலையின் ஓரத்தில் கண்டுபிடித்தனர், மேலும் வாகனத்தின் ஓட்டுநரைக் கண்டறிய முடியவில்லை.
“வாகனத்தை ஆய்வு செய்ததில், 19 முதல் 36 வயதுக்குட்பட்ட 6 மியான்மர் பிரஜைகள், அடையாள ஆவணங்கள் ஏதும் இல்லாதது இருந்தது கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.
கைது செய்யப்படடவர்கள் அனைவரும் அடுத்த நடவடிக்கைக்காக பாகோங் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
“வாகன உரிமையாளரை கண்டறிய நடத்திய சோதனையில், சிலாங்கூரில் உள்ள ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் அது பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
“இந்த வழக்கு குடிவரவுச் சட்டம் 1959/63 (திருத்தம் 2002) பிரிவு 51 (3) மற்றும் குடியேற்றச் சட்டம் 1959/63 இன் பிரிவு 55E மற்றும் 6 (1) (c) ஆகியவற்றின் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.