துனிசியாவை துவம்சம் செய்த சுவீடன்

23ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் 48 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளும் 3ஆவது இடத்தில் இருக்கும் சிறந்த 8 அணிகளும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற உள்ளன.

இந்த நிலையில், மெக்சிக்கோவின் மாண்டெரே நகரில் நடைபெற்ற ‘எஃப்’ பிரிவு லீக் ஆட்டத்தில் சுவீடன், துனிசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்கிய 7ஆவது நிமிடத்திலேயே சுவீடன் வீரர் யாசின் அவாரி கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து 30ஆவது நிமிடத்தில் அலெக்ஸாண்டர் ஐசக் மேலும் ஒரு கோலை பதிவு செய்ய, சுவீடன் 2-0 என வலுவான முன்னிலை பெற்றது.

பின்னடைவைச் சந்தித்த துனிசியா அணி முதல் பாதி முடிவதற்கு முன்பு கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தது. அதன் பலனாக 43ஆவது நிமிடத்தில் ஓமர் ரெகிக் கோல் அடித்து அணியின் பின்னடைவை குறைத்தார். இதனால் முதல் பாதி முடிவில் சுவீடன் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் சுவீடன் வீரர் விக்டர் யோகெரெஸ் கோல் அடித்து அணியின் முன்னிலையை 3-1 ஆக உயர்த்தினார்.

அதன்பிறகு இரு அணிகளும் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியநிலையில், 84ஆவது நிமிடத்தில் சுவீடன் வீரர் மத்தியாஸ் சீவான்பெர்க் கோல் அடித்தார். அதன் பிறகு ஆட்டம் முடியும் நேரத்தில் மீண்டும் சுவீடன் வீரர் யாசின் அவாரி மற்றொரு கோலை பதிவு செய்தார். இதன் மூலம் 5-1 என்ற கணக்கில் சுவீடன் முன்னிலை பெற்றது. முடிவில் சுவீடன் அணி 5-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை துவம்சம் செய்து உலகக் கோப்பை தொடரில் வெற்றியுடன் தனது பயணத்தைத் தொடங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here