கோலாலம்பூர், ஜூலை 29 –
பேராக், ஈப்போவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெண் இயக்குநர், ஆன்லைன் டேட்டிங் தளத்தில் சந்தித்த, தன்னை ஒரு அமெரிக்கர் என்று கூறிக்கொண்ட ஒருவரால் ஏமாற்றப்பட்டதால், RM5.29 மில்லியனை இழந்தார்.
பாதிக்கப்பட்ட 64 வயதான பெண்மணி, நேற்று காவல்துறையில் புகார் அளித்ததாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறினார்.
“சந்தேக நபர் தன்னை கலிபோர்னியா மருத்துவமனையில் துணை மருத்துவராக அறிமுகம் செய்து கொண்டு பாதிக்கப்பட்டவரை காதலிப்பதாக ஏமாற்றி, தான் 22 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (RM98 மில்லியன்) மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கான ஒரு பெரிய ஒப்பந்தத்தைப் பெற்றதாகவும், அதற்கு ஆரம்ப மூலதன நிதி தேவைப்படுவதாகவும், அத்தோடு பாதிக்கப்பட்ட பெண்ணை தான் திருமணம் செய்வதாகவும் உறுதியளித்தார் ” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வாக்குறுதியை நம்பிய அந்தப் பெண்மணி, சந்தேக நபர் கொடுத்த 14 வங்கிக் கணக்குகளில் 120 பணப் பரிமாற்ற பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார், ஜனவரி மற்றும் ஜூன் 2022 க்கு இடையில், மொத்தம் RM5.29 மில்லியன் பணத்தை தனது சேமிப்பை முழுவதுமாகப் பயன்படுத்தியும் கடனாகவும் பெற்று அவருக்கு செலுத்தியுள்ளார்.
மோசடி செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுவதாக அஸ்மி கூறினார்.