பெங்கலான் உலு, ஆகஸ்ட் 13 :
இங்குள்ள கூனுங் பாகு அருகே கிலோமீட்டர் 15 இல் ஜாலான் பெங்கலான் உலு-கெரிக் என்ற இடத்தில், இன்று காலை அவர் ஓட்டிச் சென்ற கான்கிரீட் டிரெய்லர் பள்ளத்தில் விழுந்ததில், ஓட்டுநர் மரணமடைந்தார்.
இந்த விபத்தில் வி சண்முகநாதன் (48) என்பவர் டிரெய்லரில் இருந்து தூக்கி வீசப்பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று காலை 9.45 மணியளவில் பொதுமக்களிடமிருந்து விபத்து தொடர்பான அழைப்பு வந்ததாக, பெங்கலான் உலு மாவட்ட காவல்துறை தலைவர், துணை கண்காணிப்பாளர் சுல்கிப்லி இப்ராஹிம் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், பெங்கலான் உலு திசையிலிருந்து கெரிக் நோக்கி சென்ற டிரெய்லர், வளைந்த மலைப்பாதையில் செல்லும் போது, அது தானாகவே சறுக்கி சாலையின் இடது பக்கமுள்ள சுமார் 60 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது என அறியமுடிகிறது.
“இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கெரிக் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் படி மேலும் விசாரணை இன்னும் தொடர்கிறது என்றார்.