கோலாலம்பூர், ஆகஸ்ட் 30:
சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளுக்கு RM1.25 பில்லியன் மதிப்பிலான சூரிய சக்தி (சோலார்) திட்டத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சூரின் தலைவிதி எதிர்வரும் வியாழக்கிழமை தெரிய வரும்.
அனைத்து விசாரணைகளும் முடிந்து விட்ட நிலையில், தற்காப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பை நீதிபதி முஹமட் ஜைனி மஸ்லான் செப்டாம்பர் 1 ஆம் தேதி, காலை 9 மணிக்கு முன்னதாகவே வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அவரது கணவரான முன்னாள் பிரதமர் நஜிப், SRC இன்டர்நேஷனல் வழக்கில் ஊழல் புரிந்ததாக நிரூபிக்கப்பட்டு, தற்போது காஜாங் சிறையிலுள்ள நிலையில், தற்போது ரோஸ்மாவிற்கு எதிரான ஊழல் வழக்கின் தீர்ப்பும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.