ஈப்போ, செப்டம்பர் 16 :
கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மரியாதை செலுத்தும் வகையில், சிலாங்கூர் மாநிலத்தை தொடர்ந்து, பேராக் மாநிலக் கொடியும் மூன்று நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட உள்ளது.
பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷா, “பிரிட்டனின் நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணியின் மறைவால் வருத்தமடைந்ததாகவும், அவருக்கு மரியாதை செய்யும் முகமாக செப்டம்பர் 17 முதல் 19 வரை மாநிலக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்” என்றும் பேராக் மாநிலச் செயலர் டத்தோ அகமட் சுவைதி அப்துல் ரஹீம் கூறினார்.
“திங்கட்கிழமை (செப்டம்பர் 19) அவரது இறுதிச் சடங்குகள் முடிவடையும் வரை நாளை முதல் மூன்று நாட்களுக்கு பேராக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று சுல்தான் தனது இரங்கலைத் தெரிவித்தார்” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 16) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.