கோலாலம்பூர், செப்டம்பர் 20 :
புத்ராஜெயா பகுதியில் ஏராளமான திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை அதிகப்படுத்தியுள்ளனர்.
கோலாலம்பூர் துணைக் காவல்துறைத் தலைவர், டத்தோ யாஹ்யா ஓத்மான் கூறுகையில், குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்பு, தகவல் மற்றும் உதவி என்பன நிச்சயமாக போலீசாருக்கு தேவை என்றும் அவர்கள் தேவையானவற்றை வழங்குவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் “சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ரோந்துகளின் அதிர்வெண்ணை அதிகரிக்கவும் மாவட்ட காவல்துறைத் தலைவரைக் கேட்டுக் கொண்டேன்.
“குற்றவாளிகள் பயன்படுத்தும் சில எளிதான இலக்குகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம், அவற்றை தடுக்க குறிப்பாக நகரின் புறநகர்ப் பகுதிகளில் ரோந்துகள் அதிகரிக்கப்படும்,” என்று அவர் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முன்னதாக, புத்ராஜெயாவில் பல வீடுகளை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்களை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன, இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த புதன்கிழமை 11 ஆம் வட்டாரத்தில் ஒரு கொள்ளை வழக்கும், கடந்த திங்கட்கிழமை 9 ஆம் வட்டாரத்தில் மேலும் ஒரு கொள்ளை சம்பவமும் நடந்தது.
இதற்கிடையில், 9 ஆம் வட்டாரத்தில் நடந்த சம்பவத்தின் தற்போதைய நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த யஹ்யா, அது தொடர்பில் தனது தரப்பு இரண்டு வெளிநாட்டு பிரஜைகளை கைது செய்ததாக கூறினார்.