லங்காவி, செப். 30 :
இங்குள்ள பூலாவ் பாசீர் கடல் பகுதியில் இன்று அடையாளம் தெரியாத, கருப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்த ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் தொடர்பில், காலை 10.20 மணியளவில் பொதுமக்களிடமிருந்து போலீசாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது என்று லங்காவி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஷரிமான் ஆஷாரி தெரிவித்தார்.
“அந்த சடலம் மலேசிய கடல்சார் அமலாக்க துறையால் மீட்கப்பட்டு , காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
“அடையாளத்தினைக் கொண்டு அது ஒரு வெளிநாட்டவரது சடலம் என்று நம்பப்படுவதாகவும், சடலம் சுல்தானா மலிஹா மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது,” என்று அவர் இன்று இங்கு தொடர்பு கொண்டபோது கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்டவர் உடல் உப்பியுள்ளதால் அவர் ஒன்று முதல் இரண்டு நாட்களுக்குள் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
முதற்கட்ட பரிசோதனையில் இறந்தவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது என்றார்.