ஜோகூர் பாரு, அக்டோபர் 4 :
கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 2) தாமான் ஸ்கூடாயில், மூன்று வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு விற்பனையாளரும், இந்தோனேசிய பணிப்பெண்ணும் ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க ஜோகூர் பாரு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
ஜோகூர் பாரு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆர்.சாலினி, இந்த விளக்கமறியல் உத்தரவை இன்று செவ்வாய்க்கிழமை (அக் 4) வழங்கினார்.
இன்று காலை 9 மணியளவில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் கைவிலங்குடன் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
28 வயதான ஆணும் 40 வயதுடைய பெண்ணும் கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இரண்டு சந்தேக நபர்களும் நேற்று திங்கள்கிழமை (அக் 3) நண்பகல் கைது செய்யப்பட்டதாக மாநில காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் 11 மணி வரை பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை புகார் அளித்ததை அடுத்து, சம்பவம் குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது என்றார்.
“பாதிக்கப்பட்டவரின் தந்தை சிங்கப்பூரில் பணிபுரிகிறார், தாய் யோங் பெங்கில் பணிபுரிகிறார். அவர்கள் தங்கள் இரண்டு குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக, விற்பனையாளராக பணிபுரியும் தங்கள் நண்பரான ஆண் சந்தேக நபரக்கு மாதாந்தம் RM2,800 பணம் செலுத்தி வந்தனர்.
மேலும் “பாதிக்கப்பட்டவரும் ஒரு வயதுடைய அவரது இளைய சகோதரரும் மூன்று மாதங்களுக்கு முன்னர் இருந்தே சந்தேகநபரின் பாதுகாப்பில் உள்ளனர்” என்று அவர் கூறினார்.
இந்த வழக்கில், இறந்த குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதாலும் , இளைய சகோதரருக்கு எந்த காயமும் ஏற்படாததால், பாதிக்கப்பட்டவர் மட்டுமே துஷ்பிரயோகம் செய்யப்பட்டார் என்று தாம் நம்புவதாக கமாருல் ஜமான் மேலும் கூறினார்.