கோலாலம்பூர், அக்டோபர் 9 :
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (நட்மா) அறிக்கையின் படி, நேற்று முதல் இந்த வியாழன் வரைக்கும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள கடலில் கொந்தளிப்பு மற்றும் உயர அலைகளால் நீர்ப்பெருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நட்மா ஃபேஸ்புக்கில் பகிர்ந்த ஒரு பதிவின் மூலம், கடல் கொந்தளிப்பு ஏற்படும் பகுதிகளாக கோல மூடா, கெடா; பாகன் டத்தோ, பேராக்; போர்ட் கிள்ளான், சிலாங்கூர் மற்றும் பத்து பஹாட் மற்றும் ஜோகூரில் உள்ள பொந்தியான் என்பன இனங்காணப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.
நட்மாவின் கூற்றுப்படி, சந்திரன் மற்றும் சூரியனின் நிலைகள் மாற்றமடையும்போது ஈர்ப்பு விசையின் தாக்கத்தால் இந்த கடல் கொந்தளிப்பு நிகழ்வு ஏற்படுகிறது, இதனால் நிலத்தில் நீர் பெருக்கெடுத்து கடலோரப் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
“இந்த நிகழ்வு நிகழும்போது கடற்கரைக்கு அருகில் வசிப்பவர்கள் மிகவும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு https://hydro.gov/ramalanpasangsurut என்ற இணையதளத்தினை அணுகலாம் என்று அது மேலும் கூறியுள்ளது.