காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 42 வயது பெண் அடுக்குமாடிக் குடியிருப்பில் சடலமாக மீட்பு

பெனாம்பாங்:

கடந்த ஜூன் 30-ஆம் தேதி முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 42 வயதுடைய வெளிநாட்டுப் பெண் ஒருவர், ஜாலான் பெனாம்பாங் லாமாவில் (Jalan Penampang Lama) உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் (Apartment) சடலமாக மீட்கப்பட்டார்.

தனியாக வசித்து வந்த அந்தப் பெண்ணை, இன்று காலை முதல் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால் கவலையடைந்த அவரது முதலாளி, நேராக அவரது குடியிருப்புக்குச் சென்று பார்த்துள்ளார்.

வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், அவர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார். பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், அந்தப் பெண் அங்கு இறந்து கிடப்பதைக் கண்டறிந்தனர்.

“கடந்த ஜூன் 29-ஆம் தேதி தான் விடுப்பு எடுப்பதாகவும், மறுநாள் ஜூன் 30 அன்று மீண்டும் வேலைக்குத் திரும்புவதாகவும் அந்தப் பெண் தனது முதலாளியிடம் கூறியிருந்தார். முதற்கட்ட விசாரணையில், அவரது மரணத்தில் எந்தவொரு குற்றவியல் கூறுகளும் (Foul play) இல்லை என்பது தெரியவந்துள்ளது” என்று, பெனாம்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் சாமி நியூட்டன் (Supt Sammy Newton) தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாகப் பொதுமக்கள் தேவையற்ற ஊகங்களை பரப்ப வேண்டாம் என்றும், இறந்தவரின் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சம்பவ இடத்தின் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை இணையத்தில் பகிர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது இச்சம்பவம் திடீர் மரணம் (Sudden Death) என வகைப்படுத்தப்பட்டு, உடற்கூறாய்வு முடிவுகளுக்காகக் காவல்துறை காத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here